படம் முடிஞ்ச வெளில போயிட்டு இருந்தப்போ யாரோ ஒருத்தரு "இந்தப்படம் பாக்கறதுக்கு அப்டியே மௌனராகம் படம் மாதிரியே இருக்கே"ன்னு சொல்லிட்டு போனாரு. அடப்பாவி படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிசத்துலயே இது தெரிஞ்சுடுச்சே இப்போதான் உனக்கு தெரியுதா ? வெளங்கும் என்றிருந்தது.

இன்றைக்கு "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்துக்குதான் போகலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தேன். கருந்தேள் சொன்னமாதிரி 4 தியேட்டர்ல மட்டும்தான் இங்கே பெங்களூர்ல ரிலீஸ். சரி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு தியேட்டர் தேடி அலையறதுக்கு, ராஜா ராணி எசவா இருக்குது அதுக்கு போகலாம்னு நண்பர்கள் சொன்னதால் வேற வழியில்லாம போயிட்டேன். முன்னாடியே மிக்ஸ்டு கமெண்ட்ஸ் இந்தப்படத்த பத்தி வந்துருந்ததால ரொம்பலாம் எதிர்பார்த்துட்டு போகாம சாதாரண மனநிலையில் தான் போயிருந்தேன்.

படத்தோட கதைனு பாத்தா ரொம்ப சிம்பிளான கதை தான். அதுவும் புதுமையான கதைலாம் ஒன்னியும் கிடையாது. இதுவரைக்கும் வந்திருக்கற அத்தனை மெலோட்ராமா படங்களோட கலவையா இந்தப்படம் இருக்குது. மௌனராகம் பாதி, சில்லுனு ஒரு காதல் மீதியா கலந்துகட்டி கதை சொல்லியிடுக்காங்க. திடீர்னு அலைபாயுதே ஞாபகம்லாம் வந்துச்சு. இடையில விடிவி-யும் ஞாபகமும் வந்தது. ஆனா என்னன்னா, அத்தனையையும் இந்தக்காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி சொல்லிருக்காரு டைரக்டர் அட்லீ.

மௌனராகம் ரீமேக்னு தெரிஞ்சுட்டதால படம் எப்டி போகும், எப்டி முடியப்போகும்னு முன்னாலேயே தெள்ளத்தெளிவா தெரிஞ்சுடுது. ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமல் கல்யாணம் செய்துக்கற ஆர்யா, நயன்தாரா ஜோடி எப்டி கடைசில ஒன்னு சேர்றாங்கன்றது தான் கதை. இதுக்கிடையில ஜெய்-நயன்தாரா காதலும், ஆர்யா-நஸ்ரியா காதலும் ஃப்ளாஸ்பேக்கா வருது. அம்புட்டுதேன் கதை.

படத்தோட பெரிய பிளஸ் பாயிண்ட் ஜெய். மொத்தப்படத்திலும் ஹைலைட்டா அமைஞ்சதுனா அது அவரோட கதாபாத்திரம் தான். நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா எல்லாரும் கஷ்டப்பட்டு நடிச்சு வாங்குற பேரை அசால்ட்டா தட்டிட்டு போறாரு ஜெய். கொஞ்சம் "எங்கேயும் எப்போதும்" படத்தோட கேரக்டர் மாதிரியே தெரிந்தாலும் வெகுவாக ரசிக்க முடியுது. அதே போல ஒருசில இடங்களில் ஜெய்யின் நடிப்பு கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் அது குறையாக தெரியவில்லை. ஜெய்யின் திரையுலக வாழ்க்கையில் இந்தப்படம் ஒரு முக்கியமான இடத்தைப்பெறும்.

அடுத்து நயன்தாரா. "பில்லா", "யாரடி நீ மோகினி" படங்களுக்கு அப்புறம் இப்போதான் இவ்ளோ அழகா இருக்கா. இப்போ கொஞ்ச காலமா நஸ்ரியா சூறாவளி சுழன்றுகொண்டிருந்தாலும், இந்தப்படத்துல நஸ்ரியாவ விடவும் நயன்தாரா தான் செம்ம அழகு. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கி அவ்ளோ அழகா காமிச்சுருக்காங்க. அதுக்காகவே படத்தை இன்னொரு தடவை பாக்கலாம். அழகு மட்டுமில்லாம நடிப்பும் செம்ம. குறை சொல்லமுடியாத நடிப்பு.

ஆர்யா, நஸ்ரியா (ரிங்க ரிங்கா பாட்டுக்கு நைட்டி போட்டுகிட்டு ஆடுற சீன்லயே நான் காலி), சத்யன், சந்தானம், சத்யராஜ்னு அத்தனை பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செஞ்சிருக்காங்க. சந்தானம் வழக்கம்போல சிரிப்பு மூட்டுறாரு. சத்யனும் தன்னோட பங்குக்கு கலகலப்பூட்டுகிறார். இந்தப்படத்துல, இந்தக்கதாபாத்திரம் தான் முக்கியம்னு இல்லாம ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு. அதுலயும் குறிப்பா எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்கள்ல ஒருத்தரான சத்யராஜ் இந்தப்படத்துல வித்தியாசமான அப்பா கேரக்டர்ல நடிச்சிருக்காரு. அவரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சது.

ஒளிப்பதிவு ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகா காட்டுறதுக்காக ரொம்பவே மெனக்கெட்டுருக்காங்க. அப்டியே கண்ல எடுத்து ஒத்திக்கலாம் போல அவ்ளோ அருமையா இருந்தது. ஏற்கனவே அழகான நயன்தாராவை இன்னும் அழகா காமிச்சுருக்காங்க. படத்தோட காட்சிகள் மேக்கிங்க்லாம் முதல் படம் போலவே தெரியலை. அந்த வகையில் அட்லீயின் உழைப்புக்கு ஒரு பொக்கே. அதே போல வசனங்களும் இந்தப்படத்துக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.


இப்போ குறைகள், படம் கொஞ்சம் லெங்க்த்த்த்த்த்து. அப்புறம் முதல் பாதியில் இருந்த சுவாரசியமும், ரொமான்சும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை. முதல் பாதியில் ஜெய்-நயன்தாரா காதல் ரசிக்கும் விதத்துல இருந்த மாதிரி இரண்டாம் பாதியில் ஆர்யா-நஸ்ரியா காதல் இல்லை. அதே போல சிறு சிறு லாஜிக் மிஸ்டேக்குகள். அப்புறம் க்ளைமாக்ஸ்ல ட்விஸ்ட்டுங்கற பேர்ல ஒரு மொக்கையை போடுவாய்ங்க. அது இல்லாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்குமோனு தோணுது.

அப்புறம் படத்தோட இன்னொரு மைனஸ், இசை. ஜி.வி.பிரகாசின் இசையில் எந்தப்பாட்டும் மனசுல நிக்கலை. அதே போல பிண்ணனி இசை எல்லாம் ஏற்கனவே கேட்டது போலவே இருந்தது. சில இடங்கள்ல எரிச்சலையும் ஏற்படுத்துச்சி. யுவன் இசையமைச்சுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்னு தோன்றியது. பாடல்கள் ஒருசிலவற்றை தவிர மற்றவை எல்லாம் படத்தோட வேகத்தடையா தான் இருந்தது. பாட்டு போடும்போதெல்லாம் போரடித்தது.

அடுத்து எடிட்டிங்க். நிறைய இடத்தில் கத்திரி போட்டுருக்கனும். அதுலயும் இரண்டாம் பாதியில் ரொம்பவே போரடித்தது. நான் படம் பாத்த தியேட்டர் ரொம்ப பெருசு. மேட்னி ஷோவுக்கு ஹவுஸ்ஃபுல் ஆயிடுச்சு. மொத்தக் கூட்டமும் முதல்பாதிக்கு அவ்ளோ சவுண்டு விட்டு சிரிச்சு, ரசிச்சு பாத்தாங்க.நல்லா ரகளையா போச்சு. அதே இரண்டாம் பாதியில, தேமேனு எப்படா முடியும்னு கொட்டாவி விட்டத பாக்க முடிஞ்சது. அதிலும் படம் இப்டித்தான் முடியும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச பின்னாடி, இன்னும் லெங்க்த்தா இழுத்ததை கம்மி பண்ணியிருக்கலாம்.

என்னதான் குறைகள் இருந்தாலும், சமீபத்தில் வந்த படங்களில் ஒரு முக்கியமான ஃபீல்குட் படம் இது. ஆனால் அதை இன்னும் நன்றாக தந்திருக்கலாம் என்பதே என் ஆதங்கம். அதேபோல குடும்பத்தோட போய் பாக்கறதுக்கு ஏற்ற படம்.

காதலர்களுக்கும், முன்னாள் காதலர்களுக்கும், இன்னாள் குடும்பத்தாருக்கும் படம் ரொம்ப பிடிக்கும். அதுவும் காதலன்/காதலி-யோடு போய் பாத்தீங்கன்னா நல்லா எஞ்சாய் பண்ணலாம். ஆனா நம்மள மாதிரி அட்டகத்தி பசங்களா போய் பாத்தா முதல் பாதி மட்டுமே நல்லா எஞ்சாய் பண்ணலாம். இரண்டாம் பாதி சற்றே போரடிக்கும். அதை சமாளிக்க ரெடி என்றால் தாராளமாக போய்ப்பார்க்க வேண்டிய படம்.

There is LIFE after love failure
There is LOVE after love failure
இது படம் ஆரம்பிக்கறப்போ வர்ற டயலாக். அதுபோலவே படம் முடியும் சமயத்துல ஒரு டயலாக் வரும். "காதலிக்கறவங்கலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஆனா கல்யாணம் பண்ணிக்கறவங்க காதலிக்கலாம்"
இந்த ரெண்டு டயலாக்குகளுக்காகவே படம் பாக்கலாம்.

ராஜா ராணி (2013) - அட்டகத்தி பசங்க கொஞ்சம் உசாரு..!!